யாழில் உயிரிழந்த கர்ப்பிணி தாதி தொடர்பில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்!!

1472

 

யாழில் உயிரிழந்த கர்ப்பிணி தாதி

யாழ்ப்பாணத்தில் சிகிச்சை பலனின்றி ஆறு மாத கர்ப்பிணி தாதி ஒருவர் உயிரிழந்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த தாதிக்க தவறான சிகிச்சை வழங்கப்பட்டதால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

யாழ். பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலையில் தாதி உத்தியோகஸ்தராக பணி புரியும் குலதீபன் பிருந்தா (வயது – 32) எனும் 4 வயது பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த தாதி உத்தியோகஸ்தர் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் வாந்தி குணத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், இதற்காக கையில் ஊசி மருந்தொன்றை ஏற்றி வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நேற்று காலை கடமைக்கு வந்த தாதி பிற்பகல் 1 மணியளவில் கடமை முடிந்து வீடு சென்றுள்ளார். அங்கு தனது 4 வயது பிள்ளையுடனும் கணவருடனும் சாதாரணமாகவே கதைத்து விட்டு குளியல் அறை சென்றுள்ளார். பின்னர் உணவருந்தியதன் பின்னர் உறங்கியதாக தெரியவருகின்றது.

இந்தநிலையில் அவர் உறக்கத்திலிருந்து எழுந்திருக்காத நிலையில் பிற்பகல் 2.15 மணியளவில் அவர் கணவரால் மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இறந்தவரின் சடலம் தற்போது மந்திகை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மரண விசாரணை அதிகாரி பார்வையிட்டதன் பின்னர் சடலமானது யாழ். போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளதாக மந்திகை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த தாதியை கையில் ஊசியுடன் வீடு செல்ல எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது எனவும், தாதி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வீட்டில் வைத்து மருந்தை பயன்படுத்தியதால் மருந்தின் தாக்கத்தால் மரணத்தை தழுவிக் கொண்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.