கிளிநொச்சியில் கஞ்சா தொடர்பில் தகவல் வழங்கிய மாணவனுக்கு நேர்ந்துள்ள நிலை!!

814

 

மாணவனுக்கு நேர்ந்துள்ள நிலை

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டங்கள் பல பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கிளிநொச்சி, கோணாவில் மகா வித்தியாலயத்தில் விழிப்புணர்வு நிகழ்வின் போது தரம் 8இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் கஞ்சா விற்பனையை குறித்து பொலிஸாரிடம் தகவல் வழங்கியுள்ளார்.

குறித்த மாணவன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியமை தொடர்பில் கஞ்சா விற்பனையாளர்களுக்கு தெரிய வந்துள்ளது. இந்நிலையில் கஞ்சா விற்பனையாளர்கள் குறித்த மாணவனை அச்சுறுத்தியதோடு, தாக்குவதற்கும் முயற்சித்திருந்தனர்.

அத்தோடு மாணவனின் குடும்பமும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்திருந்ததுடன் இது தொடர்பான செய்திகளும் சில நாட்களுக்கு முன் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இதையடுத்து நேற்று மாலை குறித்த மாணவன் வீதியில் சென்ற வேளை உந்துருளியில் வந்த மூவர் மாணவனை மோதி தள்ளியதுடன் நீ செத்தாயடா என கூறி தப்பிச் சென்றுள்ளனர்.

இத் தாக்குதலினாலினால் பாதிப்புக்குள்ளான மாணவன் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தமது மகனுக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்து பெற்றோர் பாடசாலைக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர். அத்தோடு மாணவனை பாடசாலையிலிருந்து இடை நிறுத்துவதற்கும் தீர்மானித்திருந்த நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவனின் தந்தை இச் சம்பவம் தொடர்பில், ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட 1984 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு அறிவித்தும், கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்தும் மாவட்டத்தில் சிறுவர்களின் நலன்களை பாதுகாக்கின்ற பல அமைப்புகள் இருந்தும் இச் சம்பவம் தொடர்பில் எவரும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பது கவலைக்கும் கண்டனத்திற்கும் உரியது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.