வீட்டை எரித்து நாசம் செய்த விஷமிகள்
கிளிநொச்சி – பளை – கட்டைக்காடு பகுதியில் ஏழைக் குடும்பம் ஒன்றின் வீடொன்று விஷமிகளால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. கட்டைக்காட்டு பகுதியில் மூன்று பிள்ளைகளை கொண்ட குடும்பமொன்றின் வீடே இன்று அதிகாலை தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த வீடானது குடிசையாக உள்ளதனால், குடும்பத்தவர்கள் அருகில் உள்ள அயலவரது வீட்டில் உறங்குவது வழமையாகும். அந்தவகையில் நேற்று இரவும் குறித்த குடும்பம் அயல் வீட்டில் உறங்க சென்றிருந்த நிலையில், இன்று அதிகாலை அவர்களது வீடு எரிக்கப்பட்டுள்ளது.
இதன்போது அவர்களது உடமைகள் அனைத்தும் எரிந்து சாம்பலாகியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பளை காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.







