பாசிக்குடாவில் மயிரிழையில் உயிர் தப்பிய பல வெளிநாட்டவர்கள்!!

574

வாழைச்சேனை – பாசிக்குடாவில் உள்ள பிரபல விருந்தினர் விடுதி மீது பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்திய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சிசிரிவியில் பதிவாகிய காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்ட குறித்த சந்தேகநபர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 11.45 மணியளவில் இனந்தெரியாத நபரினால் குறித்த பிரபல விருந்தினர் விடுதி மீது பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் தெய்வாதீனமாக 08 வெளிநாட்டவர்கள் உட்பட 12 பேர் மயிரிழையில் தப்பியிருந்தனர்.

இந்த விடயம் சம்பந்தமாக கல்குடா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் துரித விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் குறித்த விடுதி மற்றும் அயலிலுள்ள விடுதிகளின் சிசிரிவி காணொளிகள் பரிசீலிக்கப்பட்டதில் தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர் பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் அவர் 14 நாட்கள் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இப்பகுதியில் அதிகளவான தமிழர்கள் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.