மரணத்தில் முடிந்த வேடிக்கை செயல் : அனைவருக்கும் பாடமாக அமைந்துள்ள சம்பவம்!!

1435

 

மரணத்தில் முடிந்த வேடிக்கை

வேடிக்கைக்காக செய்யும் செயல்கள் இறுதியில் சோகத்தில் முடிந்துள்ள பல சம்பவங்கள் நமது சமூகத்தில் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணமே உள்ளன. இவ்வாறானதொரு சம்பவம் வலஸ்முல்ல – கோன்கஹாவத்தை பகுதியில் பதிவாகியுள்ளது.

அனில் குமார என்பவர் தொழில் ரீதியாக மேசன் என்பதுடன், 39 வயதான ஒரு பிள்ளையின் தந்தையாவார். அவர் கடந்த வருடம் நாவம்பர் மாதம் 29 ஆம் திகதி தமது நண்பர் ஒருவரது விருந்துபசாரத்தில் கலந்து கொண்டிருந்தார். அன்றைய தினமே அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்த விருந்துபசாரத்தின் போது நபரொருவர் வேடிக்கைக்காக அவர் அமர்ந்திருந்த கதிரையை பின்னால் இழுந்துள்ளார்.

பின்னர் கீழே விழுந்த அவர் வலியில் துடித்துள்ள நிலையில், கட்டுவன மருத்துவமனையில் அவரது உறவினர்கள் அனுமதித்துள்ளனர். அங்கிருந்து அவர் மேலதிக சிகிச்சைக்காக எம்பிலிபிட்டிய மாவட்ட மருத்துவனைக்கு அனுப்பிய நிலையில் அந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் அவரை கராபிட்டிய போதனா மருத்துவமனையில் அனுமதிக்குமாறு பரிந்துரைந்துள்ளனர்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையில் அவர் கீழே விழுந்து முள்ளத்தண்டின் மேற்புறத்தில் முறிவு ஏற்பட்டுள்ளதால் உடல் உறுப்புக்கள் செயலிழந்து வருவதாக மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதற்கமைய கராபிட்டி போதனா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் இரண்டு மாதங்களாக தொடர்ந்து சிகிச்சைப்பெற்று வந்த அவர் கடந்த நான்காம் திகதி இவ்வுலகை விட்டு பிரிந்துள்ளார். வேடிக்கைக்காக செய்த ஒரு செயலால் இன்று ஒரு உயிரே பிரிந்துள்ளது.

பாடசாலைகளிலும் இது போன்ற வேடிக்கை செயல்கள் சாதாரணமாக இடம்பெற்று வருகின்றன. எனினும் இது போன்ற வேடிக்கை செயல்கள், இறுதியில் சோகத்தில் முடியும் என்பதை அனில் குமாரவின் மரணம் உணர்த்தியுள்ளது.