உயிர் தப்பிய நபர்
இலங்கையில் திடீர் விபத்தில் உயிரிழந்த 38 வயதான நபரின் கல்லீரல் மூலம் மற்றுமொரு நபர் ஒருவர் உயிர் பிழைத்துள்ளார். நேற்று மாலை இரத்தினபுரி வைத்தியசாலையில் இருந்து விமானம் மூலம் கண்டி வைத்தியசாலைக்கு கல்லீரல் கொண்டு செல்லப்பட்டது.
இதன்மூலம் நுவரெலியா பிரதேசத்தை சேர்ந்த 48 வயதான நபர் ஒருவருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது. இவ்வாறான உடற்பாகங்களை விமான மூலம் கொண்டு செல்வதற்காக விமான படையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கமைய முதல் முறையாக குறித்த கல்லீரல் விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இது போன்ற அவசர சேவைகளை வழங்க எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆலோசனை வழங்கப்பட்டது.
இந்த கல்லீரலை இரத்தினபுரியில் இருந்து விமானம் மூலம் கண்டிக்கு கொண்டு செல்வதற்கு குறைந்த பட்சம் 5 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. கல்லீரல் பொருத்தும் நடவடிக்கை வெளிநாடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்டிருந்தால் 100 லட்சம் ரூபா செலவாகும். எனினும் அரச வைத்தியசாலையில் இந்த சத்திரசிகிச்சை இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரத்தினபுரி வைத்தியசாலையில் மூளைச் சாவடைந்த 38 வயதான இளைஞனின் உடற்பாகங்களை தானமாக வழங்க குடும்பத்தினர் விருப்பம் வெளியிட்டதற்கமைய கண்டி வைத்தியசாலையில் இதனை பொருத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கண்டிக்கு கொண்டு செல்லப்பட்ட கல்லீரல் நுவரெலியாவை சேர்ந்தவருக்கும், சீறுநீரகங்கள் இரண்டு பேராதனை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கும் கொண்டு செல்லப்பட்டமையினால் 3 நோயாளர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.






