மாங்குளம் பனிக்கம் குளத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 24 பேர் காயமடைந்துள்ள அதேநேரம் மூவர் கவலைக்கிடமாகவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்துச் சபையின் காரைநகர் டிபோவுக்குச் சொந்தமான பஸ் வேக கட்டுப்பாட்டை இழந்து பனிக்கங்குளம் வளைவொன்றில் குடைசாந்துள்ளது.
இதன் காரணமாக பஸ் பெரும் சேதமடைந்துள்ளதுடன் பஸ்ஸில் பயணித்த மக்களும் பஸ்ஸில் சிக்குண்ட நிலையில் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு கிளிநொச்சி மற்றும் மாங்குளம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்..
மிகவும் வேகமாக வந்த பஸ் எதிரே வந்த வாகனமொன்றிற்கு இடம் வழங்க முற்பட்ட போது வேகத்தை கட்டுப்படுத்த முடியாது அருகில் இருந்து பள்ளத்தில் வீழ்ந்தது.
இதனையடுத்து அதனுள் பயணித்த அனைவரும் கூக்குரல் இடவே அப்பகுதியில் இருந்த அனைவரும் ஓடிச்சென்று மக்களை பஸ்ஸில் இருந்து இழுத்து, வெளியேற்றி வந்த வாகனங்களில் ஏற்றி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
இவ் விபத்து தொடர்பாக மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.




