முடிவில்லா தொடர் கதையாக மேலும் 8 தமிழக மீனவர்களுக்கு சிறை..

351

Indian-Fishermen

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களையும் ஜூன் 27 வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் கச்சத்தீவு அருகே கடந்த சனிக்கிழமை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

8 பேரையும் ஜூன் 27-வரை அனுராதபுரம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். ஏற்கெனவே இம்மாதம் 5-ஆம் திகதி 4 படகுகளில் சென்ற 24 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களைத் தவிர 6-ஆம் திகதி 5 படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 25 மீனவர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 24 மீனவர்களை இம்மாதம் 20-ஆம் திகதியும், மறுநாள் கைது செய்யப்பட்ட 25 மீனவர்களை இம்மாதம் 19-ஆம் திகதியும் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டு இம்மாதம் 27-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.