நடிகர் விஜய் சேதுபதி ஒரே நேரத்தில் தொடர்ந்து நான்கு படங்களில் நடித்து வருகின்றார். எனினும் தற்போது இந்தப் படங்களின் எண்ணிக்கையுடன் ஒன்று அதிகரித்துள்ளது. இவர் திரையுலகில் வெற்றிபெற காரணமான பீட்சா படத்தைப் போன்றே மெல்லிசை என்ற திரில்லர் படத்திலும் அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை புதுமுக இயக்குனர் ரஞ்சித் இயக்குகிறார்.
இதுகுறித்து விஜய் சேதுபதி கூறும்போது.. இந்த படம் சுவாரஸ்யமான திரில்லர் திரைக்கதையை கொண்டது. ரஞ்சித் கூறிய கதை பிடித்துப்போகவே நான் ஏற்கனவே இருந்த ஒப்பந்தங்களுக்கு இடையிலும் இந்தப் படத்தை நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று கூறினார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் ஒரு ஸ்டுடியோவில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே விஜய் சேதுபதி ஒரு பேட்டியில் கூறும்போது.. தனக்கு இப்போது இருக்கும் படப்பிடிப்புகளுக்கு மத்தியில் புதிய படம் எதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்திருந்தார். இருப்பினும் மெல்லிசை படத்தின் கதையம்சத்தில் அவருக்கு ஏற்பட்ட ஈர்ப்பே இந்தப் படத்திற்கான திகதிகளை ஒதுக்கியுள்ளது.