நடிகை திரிஷா வளர்த்த நாய் திடீர் என இறந்தது. இதனால் மனம் உடைந்து இருக்கிறார். இந்த நாயை 9 ஆண்டுகளாக வளர்த்து வந்தார். இது குட்டியாக இருந்தபோது ஐதராபாத் ரோட்டில் அனாதையாக கிடந்தது. அந்த வழியாக படப்பிடிப்புக்கு சென்ற திரிஷா காரை நிறுத்தி நாய்க்குட்டியை ஓடோடி போய் தூக்கிக் கொண்டார். அதை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் கழுவி சுத்தம் செய்து முதல் உதவி சிகிச்சைகள் அளித்தார்.
பின்னர் சென்னை கொண்டு வந்து வீட்டில் வைத்து வளர்த்தார். சில நாட்களிலேயே அந்த நாய் மீது திரிஷாவுக்கு அளவு கடந்த பிரியம் ஏற்பட்டது. படப்பிடிப்பு ஓய்வில் அதோடுதான் விளையாடுவார். விதவிதமான ஆடைகள் அணிவித்தும் அழகுபார்த்தார். அந்த நாயும் திரிஷா வீட்டுக்கு வரும் போதெல்லாம் மகிழ்ச்சியில் துள்ளி குதித்த அவரை சுற்றியே வட்டமிட்டது.
இந்த நாய்க்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக கால்நடை மருத்துவமனையில் சேர்த்தார். வைத்தியர்கள் பரிசோதித்து வயிற்றில் கட்டி இருப்பதாக கூறினர். அதை அகற்ற அறுவை சிகிச்சை செய்தார்கள். அப்போது நாய் இறந்தது.
இதுகுறித்து திரிஷா கூறும்போது, நான் வளர்த்த நாய் இறந்து போனதை எனக்கு ஏற்பட்ட மோசமான இழப்பாக கருதுகிறேன். மனம் உடைந்து போய் இருக்கிறேன். இந்த துக்கத்தில் இருந்து படிப்படியாக மீள முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன் என்றார்.