தற்கொலை செய்த இளைஞன்
தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக முகப்புத்தகத்தில் பதிவிட்டு விட்டு மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்து இளைஞன் ஒருவர் இன்று மாலை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுமன சிங்கள மகா வித்தியாலயத்திற்கு அருகாமையில் இருந்து இன்று மாலை 03.30 மணியளவில் குறித்த இளைஞன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நானு ஓயா சமர்செட் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய எம். கிளிண்டன் எலஸ்ட் என்ற இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திடீர் என நீர்த்தேக்கத்தில் பாய்வதனை கண்ட பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு அறிவித்ததனை தொடர்ந்து பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து சடலத்தினை சுமார் 4.30 மணியளவில் மீட்டுள்ளனர்.
நீர்த்தேக்கத்தில் பாய்வதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்பு குறித்த இளைஞன் நீர்த்தேக்கத்திற்கு முன்பு நின்று செல்பி புகைப்படம் எடுத்து தனது முகப்புத்தகத்தில் “END OF MY LIFE GOOD BYE GOD” என எழுதி புகைப்படத்தையும் பதிவிட்டு நீர்த்தேக்கத்தில் பாய்ந்துள்ளார்.
சடலம் புலன் விசாரணையின் பின் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காதல் விவகாரம் காரணமாக இவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா அல்லது வேறு எதுவும் காரணம் உண்டா என தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.























