சிகிச்சை அளிக்காமல் நோயாளியை தூக்கி வீசிய அவலம்!!

530

patientதர்மபுரி மாவட்டத்தில் சிகிச்சை அளிக்காமல் நோயாளியை வெளியே தூக்கி வீசிய அவல நிலை நடந்துள்ளது.

தர்மபுரி மாவட்டம் புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (40). மனைவி சரஸ்வதி. செந்தில்குமார் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். 15 நாட்களுக்கு முன் ஆந்திராவுக்கு லொறி ஓட்டி சென்றபோது விபத்து ஏற்பட்டு மார்பு, கை, கால்களில் படுகாயம் அடைந்தார்.

ஆந்திராவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தெரிந்தவர்கள் யாரும் இல்லாததால் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். 11 நாட்களாக அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று அவர் திடீரென டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும், உடனடியாக வார்டை காலி செய்து விட்டு செல்லும்படி மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அங்கிருந்த ஊழியர்கள் சிலர் அவரை வலுக்கட்டாயமாக பெட்டில் இருந்து தூக்கி வார்டுக்கு வெளியே விட்டு சென்றுள்ளனர்.

இதுகுறித்து அவரது மனைவி சரஸ்வதி கூறுகையில் டிஸ்சார்ஜ் செய்துவிட்டோம். உடனே பெட்டை காலி செய்யுங்கள் என்றனர். எனது கணவரை சிலர் தூக்கி வார்டு வாசலில் போட்டுவிட்டனர் என்றும் அவரால் உட்காரவோ, சரியாக படுக்கவோ முடியாது. நெஞ்சில் எலும்புகள் நொறுங்கியுள்ளதால் மிகவும் அவதிப்படுகிறார் எனவும் தெரிவித்துள்ளார்.

நோயாளி செந்தில்குமார் கூறுகையில் பெட்டை காலி செய்து விட்டு செல்லுங்கள் என்று கூறினர். உடல்நிலை சரியாகவில்லை என்று கூறியதற்கு வீட்டில் சென்று ஓய்வு எடுத்தாலே சரியாகிவிடும் என்று கூறினர்.

அதற்கு, என்னால் தனியாக பயணிக்க முடியாது. உறவினர்கள் ஊரில் இருந்து வந்து கொண்டிருக்கின்றனர். காலையில் வந்துவிடுவார்கள், இன்று ஒருநாள் இரவு மட்டும் தங்கி சிகிச்சை பெற்றுவிட்டு நாளை காலை உறவினர்களுடன் சென்றுவிடுகிறேன் என்று கூறினேன். அதற்கு அவர்கள் சம்மதிக்காமல் என்னை வலுக்கட்டாயமாக தூக்கி வந்து வெளியே படுக்க வைத்துவிட்டனர் என்று கூறியுள்ளார்.