வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம் : மகள்களுடன் சடலமாக கிடந்த தந்தை : உயிருக்கு போராடும் தாய்!!

375

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்

ஆந்திர மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலைக்கு முயற்சித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ஜக்கா ராகவேந்திர நாகராஜு (42). இவர் கடந்த 15 வருடங்களுக்கு முன்னதாக ஈஸ்வரம்மா (38) என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதியினருக்கு வைஷ்ணவி (13 வயது) மற்றும் வரலட்சுமி (12 வயது) என்கிற இரண்டு மகள்கள் இருந்தனர். இருவரும் அருகாமையில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். சில வருடங்களாகவே தம்பதியினர் சொந்தமாக மளிகைக்கடை ஒன்றினை வைத்து நடத்தி வந்தனர். ஆனால் அதில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதை அடுத்து, கடன் கொடுத்த பலரும் குடும்பத்தினருக்கு அதிக அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தனர்.

கடன்களை அடைப்பதற்காக நாகராஜு கடந்த 3 வருடங்களாக பெங்களூரில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்ய ஆரம்பித்துள்ளார். கிடைக்கும் சமயங்களில் எல்லாம் வீடு திரும்பியுள்ளார். கடனையும் சிறிது சிறிதாக அடைத்து வந்துள்ளார். ஆனால் அதில் பெரிய அளவிற்கு வருமானம் எதுவும் இல்லாத காரணத்தால், கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில் 10 நாட்களுக்கு முன் வீடு திரும்பிய நாகராஜு, கடனை திருப்பி அடைக்க இன்னும் கால அவகாசம் தருமாறு கடன் கொடுத்தவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததை அடுத்து, குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

வீட்டிலிருந்து ஒரு மாதிரியான துர்நாற்றம் வருவதை அறிந்த பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர், உடனடியாக கதவை திறந்து பார்த்துள்ளார். அப்போது நகராஜு தன்னுடைய மகள்களுடன் சடலமாக கிடந்துள்ளார். அதேசமயம் அவருடைய மனைவி ஈஸ்வரம்மா பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த நபர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததோடு, வேகமாக ஈஸ்வரம்மாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.