வவுனியா செட்டிகுளத்தில் காணிப் பிணக்குகள் தொடர்பான 88 முறைப்பாடுகள் காணி மத்தியஸ்தர் சபையிடம்!!

320

செட்டிகுளத்தில் காணிப்பிணக்குகள் தொடர்பான 88 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக வவுனியா விசேட காணி மத்தியஸ்தர் சபை தவிசாளர் இ.நவரட்ணம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா, செட்டிகுளம் பிரதேசத்தில் உள்ள காணி உரிமம் மற்றும் உரிமை, காணி ஆவணம், காணி எல்லை என்பன தொடர்பான 88 பிணக்குகள் வவுனியா விசேட காணி மத்தியஸ்தர் சபையிடம் ஆற்றுப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் முதல் கட்டமாக 40 பிணக்குகள் தொடர்பான கலந்துரையாடல் மற்றும் விசாரணைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணியில் இருந்து 1 மணிவரை செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் இடம்பெறும்.

சம்மந்தப்பட்டவர்களுக்கான அழைப்புக் கடிதங்கள் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் வருகை தந்து தமது காணிப் பிணக்குகள் தொடர்பில் தீர்வினைப் பெறுவதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் காணிப் பிணக்கு உடையோர் வருகை தந்து புதிய முறைப்பாடுகளையும் அன்றைய தினம் செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.