விடுதியில் தூக்கிட்டு மாணவி தற்கொலை : பள்ளியில் நுழைந்து பொருட்களை அடித்து நொறுக்கிய உறவினர்கள்!!

425

மாணவி தற்கொலை

தமிழகத்தின் கள்ளக்குறிச்சி அருகே பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து, மாணவியின் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நுவரை கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரின் மகள்,கள்ளக்குறிச்சி சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்றைய தினம் பள்ளியில் கணிதத் தேர்வு எழுதிய குறித்த மாணவி, வழக்கம்போல் விடுதிக்கு சென்றுள்ளார்.

ஆனால் அங்கு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பள்ளி நிர்வாகத்தின் மீது பொலிசில் புகார் அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து குறித்த மாணவியின் உடலை மீட்ட பொலிசார், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் 150க்கும் மேற்பட்டோர், சின்ன சேலம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும், பள்ளி நிர்வாகத்தினர் முறையாக பதிலளிக்காததால், பள்ளியில் நுழைந்த மாணவியின் உறவினர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். இதனைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.