அதிர்ச்சியில் உறைந்த மனைவி
இந்தியாவில் தனது மகளை அடித்து கொடுமைப்படுத்திய வீடியோவை மனைவிக்கு அனுப்பிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். பீகார் மாநிலத்தின் பாட்னாவை சேர்ந்தவர் கிருஷ்ணா முக்திபாத். இவர் மனைவி நயினா குமாரி. தம்பதிக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் கிருஷ்ணா குடிபோதையில் நயினாவையும் அவர் மகள்களை அடித்து கொடுமைப்படுத்தி வந்தார்.
இதனால் சில மாதங்களுக்கு முன்னர் கணவரை பிரிந்து தனது இரண்டு மகள்களுடன் நயினா தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். ஆனால் மூன்றாவது மகளான 5 வயது சிறுமியை நயினாவால் உடன் அழைத்து செல்ல முடியவில்லை.
இந்நிலையில் மூன்றாவது மகளை தொடர்ந்து அடித்து கொடுமைப்படுத்திய கிருஷ்ணா, மனரீதியாகவும் அவரை துன்புறுத்தினார். மகளை கொடூரமாக அடிக்கும் வீடியோவை சில நாட்களுக்கு முன்னர் தனது மனைவி நயினாவுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பினார் கிருஷ்ணா.
வீடியோவை பார்த்த பிறகு மனைவி தன் வீட்டுக்கு வந்துவிடுவார் என்று எண்ணியே கிருஷ்ணா அப்படி செய்தார். அந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த நயினா அதை பேஸ்புக்கில் பதிவிட அது வைரலானது.
இது பொலிசார் கவனத்துக்கு சென்ற நிலையில் உடனடி நடவடிக்கையில் இறங்கிய பொலிசார் கிருஷ்ணாவை கைது செய்தனர். அந்த சமயத்தில் கிருஷ்ணா முழு குடிபோதையில் இருந்தார். பொலிசார் கூறுகையில், கிருஷ்ணாவின் மூன்றாவது மகளை நயினாவிடம் ஒப்படைக்கவுள்ளோம். அதற்கு முன்னர் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கவுன்சலிங் கொடுக்கவுள்ளோம் என கூறியுள்ளனர்.