முல்லைத்தீவில் பார்வையற்ற இரண்டு மாணவர்களின் சாதனை!!

735

இரண்டு மாணவர்களின் சாதனை

விடுதலைப் புலிகளின் காலத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இனிய வாழ்வு இல்லத்தில் வசிக்கும் கண்பார்வை அற்ற இரண்டு மாணவர்கள் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றி சித்தியடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு – வள்ளிபுனம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் அ.அபிசேக், ச.அரவிந்தன் என்னும் கண்பார்வையற்ற இரண்டு மாணவர்களும் பிரெயில் எழுத்து முறை மூலம் பரிட்சையில் தோற்றி சித்தியடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் 1997 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இனிய வாழ்வு இல்லத்தில் விழிப்புலன், செவிப்புலன், பேச்சுத்திறன் குன்றிய 50க்கு மேற்பட்ட மாணவர்கள் தற்போது வரை சிறப்பு கல்வி கற்று வருகின்றனர்.

இந்நிலையில் இனிய வாழ்வு இல்லத்தில் வசிக்கும் கண்பார்வை அற்ற இரண்டு மாணவர்கள் வள்ளிபுனம் மகாவித்தியாலயத்தில் 2018 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றி சித்தியடைந்துள்ளனர்.

இது தொடர்பில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த கண்பார்வையற்ற மாணவர்களின் ஒருவரான அருள்பிரகாசம் அபிசேக் கருத்து தெரிவிக்கையில்,

இனிய வாழ்வு இல்லத்தின் சிறப்பு கற்றல் செயற்பாடுகள், ஊக்கத்துடன் முல்லைத்தீவு வள்ளிபுனம் மகாவித்தியாலயத்தில் கடந்த மூன்று வருடங்களாக கல்வி கற்று வருகின்றேன். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.சாதரன பரீட்சையில் பிரெயில் எழுத்து முறை மூலம் பரீட்சை எழுதி சித்தியடைந்துள்ளேன்.

2018 க.பொ.த சாதாரண தர பரீட்சை கடினமாக இருந்த போதும் இனியவாழ்வு இல்லத்தில் அனைவரதும் ஊக்கம் காரணமாகவும் எனது ஆசிரியர்களின் வழிகாட்டலுக்கு அமைய நான் நிறைவாக படித்து அவர்களின் பெயரையும், பெருமையும் காப்பாற்றியுள்ளேன்.

மேலும் எனது அம்மா, அப்பா சிறுவயதில் இருந்து எனக்கு மிகவும் கஸ்டப்பட்டு கல்வி கற்பித்துள்ளனர். அவர்களின் எதிர்பார்ப்பையும் நான் நிறைவேற்றியுள்ளளேன். இதன் மூலமாக எனக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.