கணவரை கொன்று தண்ணீர் தொட்டியில் மறைத்த மனைவி : எலும்புக்கூடாக இருந்த சடலம்!!

360

கணவரை கொன்று தண்ணீர் தொட்டியில் மறைத்த மனைவி

தமிழகத்தில் கணவரை கொலை செய்துவிட்டு உடலை கழிவுநீர் தொட்டிக்குள் மறைத்து வைத்து நாடகமாடிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அய்யாப்பிள்ளை, மனைவி பரிமளாவுடன் வசித்து வந்தார். பரிமளாவுக்கு இவர் 2ஆவது கணவர் ஆவார். குடிப்பழக்கத்துக்கு அடிமையான அய்யாப்பிள்ளை கடந்த 13ஆம் திகதி மாயமானார்.

அவர் மதுபோதையில் எங்காவது மயங்கி கிடப்பார் என நினைத்த உறவினர்கள், விரைவில் வீடு திரும்புவார் என நம்பியிருந்தனர். இரண்டு வாரங்கள் ஆகியும் அய்யாபிள்ளை வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த அவரின் சகோதரர் பொலிஸ் புகார் அளித்தார்.

இதையடுத்து பொலிசார் பரிமளாவிடம் விசாரித்தனர். அவர் முரணான பதில்களைத் தெரிவித்ததால், பொலிசாருக்கு சந்தேகம் வலுத்தது. பின்னர் கிடுக்குப்பிடி விசாரணையில் கணவரை கொன்றதை ஒப்புகொண்டார்.

அய்யாபிள்ளை, அடிக்கடி குடித்துவிட்டுவந்து பரிமளாவிடம் சண்டையிடுவார் என கூறப்படுகிறது. சம்பவம் நடந்த அன்றும் மதுபோதையில் இருந்த அய்யாபிள்ளை, வழக்கம்போல் பிரச்னை செய்துள்ளார். ஆத்திரமடைந்த பரிமளா, திடீர் தாக்குதல் நடத்தியதில் நிலைகுலைந்த அவர், அங்கேயே மயங்கிவிழுந்துள்ளார்.

அய்யாபிள்ளை போதை தெளிந்து எழுந்து விடுவார் என பரிமளா நினைத்த நிலையில் அவர் எழவில்லை. பதறிப்பேன பரிமளாவோ முகத்தில் தண்ணீர் தெளித்து பார்த்தபோது, பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்துள்ளார் அய்யாபிள்ளை. பின்னர் நள்ளிரவு நேரத்தில், வீட்டின் பின்புறம் உள்ள கழிவுநீர் தொட்டியை திறந்த பரிமளா, அதில் அய்யாபிள்ளையின் சடலத்தை போட்டு மூடியுள்ளார்.

மேலும் தொட்டியை திறக்கும் பகுதியை சிமெண்ட் பூசி மறைத்த பரிமளா, அக்கம் பக்கத்தினரிடம் ஒன்றும் தெரியாதது போலவே நடந்து கொண்டதாக காவலர்கள் கூறுகிறார்கள். தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர், கழிவுநீர் தொட்டியை உடைத்து அய்யாபிள்ளையின் சடலத்தை எலும்புக் கூடாக மீட்டனர். இதையடுத்து பரிமளாவை பொலிசார் கைது செய்துள்ளனர்.