தென்னாபிரிக்க கறுப்பு இன மக்களின் விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்து போராடிய பெரும் தலைவர் நெல்சன் மண்டேலாவின் இறுதி கிரியைகள் இன்று நடைபெறுகிறது.
நெல்சன் மண்டேலாவின் உடல் வரும் கிழக்கு கேப் மாகாணத்தில் உள்ள அவரது சொந்த ஊரான குனு கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்படும். கடந்த 5ஆம் திகதி அன்னார் தன்னுடைய 95 வது வயதில் இயற்கை எய்தினார்.
அவருடைய ஆத்ம சாந்தி பிரார்த்தனைக்காக கடந்த 11ம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அஞ்சலி நிகழ்வில் 91 நாடுகளைச் சேர்ந்த இராஜ தந்திரிகள் கலந்து கொண்டமை சரித்திரப் பிரசித்தி பெற்ற ஒரு நிகழ்வாக கருதப்படுகின்றது.
1918ஆம் ஆண்டு ஜூலை 18 இல் பிறந்த நெல்சன் மண்டேலா, நெல்சன் ரோபிசலா மண்டேலா என்ற இயற் பெயரைக் கொண்டவர்.
இவர் தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் என்ற பெருமைக்குரியவர்.
தொடக்கத்தில் அறப்போர் வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா கெரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர்.
மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம் நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார்.
1990இல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை மக்களாட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர்.
அமைதிவழிப் போராளியாக ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி குடியரசு தலைவராக, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராக இவரின் அரசியல் பயணம் தொடர்ந்தது.
இன வெறிக்கு எதிராக மண்டெலா தனது 21வது வயதில் களமிறங்கி போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார். உலக சமாதானத்துக்காக மண்டேலா ஆற்றிய சேவைகளைப் பாராட்டி அவர் சிறையில் இருக்கும்போதே இந்திய அரசு நேரு சமாதான விருது வழங்கியது. அவரின் வின்னி டெல்லிக்கு சென்ற அந்த விருதைப் பெற்றார். 1990 இல் இந்தியாவின் பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டது.
1993இல் உலக அமைதிக்கான நோபல் பரிசும் இவருக்கு வழங்கப்பட்டது. அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருது நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவரை கௌரவிக்கும் முகமாக தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18ம் திதியை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
மண்டேலா 2008ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பொது வாழ்க்கையிலிருந்து விலகியிருந்தார்.
ஓர் இன விடுதலையைப் பெற்றுத் தந்த பிதாவென்று போற்றப்படும் நெல்சன் மண்டேலாவின் உருவச்சிலையொன்று நாளை தென்னாபிரிக்கா யூனியன் கட்டட சதுக்கத்தில் திறந்து வைக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.





