பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழந்த நபர்

மஸ்கெலியா வைத்தியசாலைக்கு அருகில் அட்டன் மஸ்கெலியா பிரதான வீதியில் வளைவு பகுதியில் பயணித்த முச்சக்கரவண்டியை கண்டு ஒதுங்கிய நபர் ஒருவர் அருகில் உள்ள பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் டிக்கோயா கிளங்கன் பகுதியை சேர்ந்த டி.எம்.ரம்பண்டா வயது 59 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபர் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் எனவும் தெரிவித்துள்ள பொலிஸார் சடலம் பிரேத பரிசோதணைக்காக மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

அட்டன் பிரதேசத்திலிருந்து மஸ்கெலியாவை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி வளைவு பகுதியில் செல்லும் போது முச்சக்கரவண்டி குடைசாய்ந்துள்ளது. அவ்விடத்தில் குறித்த நபர் வீதியில் சென்றுக் கொண்டிருந்த போது குடைசாய்ந்த முச்சக்கரவண்டி தன்னை மோதிவிடுமோ என பயத்தில் வீதியை விட்டு ஒதுங்கிய போதே பள்ளத்தில் வீழ்ந்துள்ளார்.

இவரை மீட்க முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் முயற்சித்தபோது, அவர் உயிரிழந்துள்ளதை அறிந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் சிறு சிறு காயங்களுக்குள்ளாகி மஸ்கெலியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதோடு, முச்சக்கரவண்டியின் சாரதியை மஸ்கெலியா பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





