அதிர்ச்சி கொடுத்த சிறுவன்

சிறுவன் ஒருவன் அடையாளம் தெரியாத சிலர் தன்னை கடத்தியதாக கூறி நாடகமாடியதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

கல்வி நிலையத்திற்கு செல்லாமல் கிரிக்கட் விளையாடச் சென்ற, நெல்லியடி மாலுசந்திப் பகுதியைச் சேர்ந்த எட்டாம் தரத்தில் கல்வி கற்கும் சிறுவனே இவ்வாறு நாடகமாடியுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த சிறுவன் நேற்று பிற்பகல் 3 மணியளவில் தனியார் கல்வி நிலையத்திற்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். இதனை அடுத்து, மாலை அந்த சிறுவன் தொண்டைமாணாறு பகுதியிலிருந்து பெற்றோருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிலர் காரில் தன்னை கடத்தி வந்து வீதியில் விட்டு சென்றதாக தகவல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த இடத்திற்கு சென்ற பெற்றோர் சிறுவனை அழைத்து கொண்டு பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடொன்றினை மேற்கொண்டுள்ளனர்.

எனினும் முறைப்பாட்டில் சந்தேகம் கொண்ட பொலிஸார் குறித்த சிறுவனையும், அவனது தந்தையையும் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டதை அடுத்து, கல்வி நிலையம் செல்லாது கிரிக்கட் விளையாட சென்றதை மறைக்க தான் கடத்தல் நாடகம் ஆடியதாக சிறுவன் தெரிவித்தார் என நெல்லியடி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சிறுவனால் தொண்டைமாணாறு பாலத்தில் மறைத்து வைக்கப்பட்ட துவிச்சக்கர வண்டி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. சிறுவன் கடத்தப்பட்ட தகவல் பரவியதில் வடமராட்சி பகுதியில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆயினும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் உண்மையை வெளிக் கொண்டு வந்ததில் பதற்ற நிலை தணிந்துள்ளது.




