யாழ் போதனா வைத்தியசாலையில் தொடரும் பணி பகிஷ்கரிப்பு!!

618

யாழ்.போதனா வைத்தியசாலையில் மிக நீண்ட காலமாக பணியாற்றும் சேன்ஜேன் அம்புலன்ஸ் மற்றும் சென்சிலுவைச் சங்க பணியாளர்கள் நேற்று சனிக்கிழமையும் இரண்டாவது நாளாகவும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இதனால் யாழ்.போதனா வைத்திய சாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவினைத் தவிர்ந்த ஏனைய சிகிச்சைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில சிகிச்சைகள் நடைபெறாமல் ஸ்தம்பித்தும் காணப்பட்டது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக குறைந்தளவு சம்பளத்தில் பணியாற்றிவரும் மேற்படி பணியாளர்களை புறக்கணித்துவிட்டு தென்னிலங்கையில் இருந்து புதிய பணியாளர்களை உள்வாங்கிக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான நேர்முகத்தேர்வும் அண்மையில் நடைபெற்றது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த வாரத்திலும் குறித்த பணியாளர்கள் எதிர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். ஆனாலும் வைத்தியசாலை நிர்வாகத்தினரும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினரும் கொடுத்து வாக்குறுதிகளை நம்பி அவர்கள் தமது போராட்டங்களைக் கைவிட்டு தொடர்ந்தும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இருப்பினும் உறுதி மொழிகள் வழங்கப்பட்ட காலம் கடந்துவிட்ட நிலையில் குறித்த பணியாளர்கள் தொர்ச்சியான போராட்டத்தினை மேற்கொள்ள முடிவு செய்தனர். ஆனாலும் நேற்று முன்னதினம் ஆரம்பமான இப்போராட்டத்தினை நிறுத்துவதற்கும் பல்வேறுபட்ட தரப்பினராலும் குறித்த பணியாளர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருந்த போதும் அவர்கள் தமக்கான இறுதி முடிவு ஒன்றினை பெற்றுக் கொள்ளும்வரைக்கும் தமது போராட்டத்தினை கைவிடபோவதில்லை என்று தெரிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக நேற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டடத் தொகுதிக்கு முன்பாக தமது இரண்டாம் நாள் போராட்டத்தினை தொடர்ந்திருந்தனர். எனினும் தமது போராட்டத்திற்கான நீதியினை வழங்க இதுவரைக்கும் சம்மந்தப்பட்ட தரப்பினர் முன்வரவில்லை என்றும் ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

jaffna_hospital jaffna_hospital1