தந்தை குறடால் தாக்கியதில் ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக பலி!!

937

குழந்தை பரிதாபமாக பலி

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பகுதியில் தந்தை குறடால் தாக்கியதில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. கடந்த 4ஆம் திகதி மனைவியுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக குறடின் மூலம் கணவன், மனைவியை தாக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது தவறுதலாக குறடு மனைவியின் கையிலிருந்த குழந்தையின் தலையில் பட்டுள்ளது. இந்த நிலையில் படுகாயமடைந்த குழந்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளது.

கடுக்காய்முனை – அருள்நேசபுரம், அம்பலாந்துறை பகுதியை சேர்ந்த ஒன்றரை வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. சம்பவ தினத்தன்று குழந்தையை தாக்கிய சந்தேகநபரான தந்தை தப்பியோடியுள்ள நிலையில், அவரை கொக்கட்டிச்சோலை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் 30 வயதுடைய பெரியதம்பி திலீபன் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.