பேச மறுத்த இளம்பெண்ணை 15 இடங்களில் சரமாரியாக குத்திய இளைஞனின் வெறிச்செயல்!!

285

இளைஞனின் வெறிச்செயல்

சென்னையில் தன்னுடன் பேச மறுத்த காதலியை, வாலிபர் ஒருவர் 15 இடங்களில் சரமாரியாக குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணியைச் சேர்ந்தவர் கவின்(24). இவரும் வேலூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த காவ்யா(22) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் காவ்யாவுக்கு வேலை கிடைத்த நிலையில், கவின் வேலைக்கு செல்லாமலும், பொறுப்பில்லாமலும் நடந்துகொண்டுள்ளார்.

இதனால் காவ்யா அவருடனான காதலை முறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இது கவினுக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, காதலிக்கும்போது பரிமாறிக் கொண்ட பரிசுப்பொருட்களை திருப்பி கொடுத்துவிடலாம் என்று கூறி காவ்யாவை வரவழைத்துள்ளார் கவின்.

தன்னை சந்திக்க வந்த காவ்யாவை பேனாக்கத்தியால் கழுத்து, வயிறு, கை என 15 இடங்களில் சரமாரியாக கவின் குத்தியுள்ளார். இதனால் காவ்யா அலறியதைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் திரண்டு கவினைப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் காவ்யா அடையாரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக கவின் பொதுமக்களிடம் சிக்கியபோது தனது கை மணிக்கட்டை அறுத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில் காவ்யாவிடம் பொலிசார் நடத்திய விசாரணையில், ‘கவினின் நடவடிக்கை எனக்கு பிடிக்கவில்லை. அதனால் ஒரு மாசமாக நான் கவினிடம் பேசுவதை தவிர்த்தேன். நேற்று மாலை கூட நான் பேசவில்லை. அதனால் தான் ஆத்திரமடைந்து, என் கூட பேசமாட்டியா என்று கேட்டு கேட்டு கத்தியால் குத்தினார்’ என தெரிவித்துள்ளார்.