வவுனியாவில் பொலிசார் லஞ்சம் கோரியதாக மக்கள் வீதியை மறித்துப் போராட்டம்!!(படங்கள்)

336

வவுனியா இலுப்பையடிப்பகுதியில் கடமையில் இருந்த போக்குவரத்துப் பொலிசார் லஞ்சம் வாங்க முற்பட்டதாகக் கூறி மக்கள் வீதி மறித்துப் போராட்டம் ஒன்றினை நேற்று இரவு 7.30 மணியளவில் மேற்கொண்டனர்.

வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் ஆட்டோ ஒன்றில் பயணித்த தாயும் மகனும் இலுப்பையடியில் கடை ஒன்றிற்கு செல்ல ஆட்டோவை நிறுத்த முற்பட்டவேளை எதிரே நின்ற பொலிசார் அவர்களை சமிக்ஞை செய்து அழைத்துள்ளார்.

இதனால் ஆட்டோவை அருகில் உள்ள சந்தியில் நிறுத்திவிட்டு பொலிசாரிடம் தமது சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் வாகனத்தின் ஆவணங்களையும் காட்டியுள்ளனர். அப்போது வீதியின் கரைக்கு அழைத்த போக்குவரத்து பொலிசார் நீங்கள் தவறாக ஆட்டோவை திருப்பியதாகவும் நிறுத்தியதாகவும் கூறி லஞ்சம் கோரியுள்ளார்.

நானும் எனது மகனும் சரியாகத்தான் வந்தோம். எம்மிடம் பணம் இல்லை. நாங்கள் சரியாக வந்த போது ஏன் லஞ்சம் தரவேண்டும்” என அவர்கள் கூற பொலிசாருக்கும் ஆட்டோவில் வந்த தாயும் மகனுக்கும் இடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆட்டோவை தவறாக திருப்பியதாகவும் சாரதி அனுமதிப் பத்திரத்தை தன்னிடம் இருந்து பறித்ததாகவும் கூறி போக்குவரத்துப் பொலிசார் சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுவிட்டு நீதிமன்றுக்கு எழுதி அதற்குரிய பற்றுச் சீட்டினை வழங்கினர்.

இதனால் தமது சாரதி அனுமதிப் பத்திரத்தை மீள தருமாறு கோரியும் லஞ்சம் கேட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தாயும் மகனும் வீதியில் இருந்து போராடினர். அப்பொழுது ஒன்று திரண்ட மக்கள் அவர்களுக்கு ஆதரவாக வீதியில் நின்று குரல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்மந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் அவர்களது சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்கியதுடன் அவர்களை வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்ய வருமாறு பணித்தார்.

இதேவேளை அருகில் இருந்த ஆட்டோ தரிப்பிடத்தில் இருந்த ஆட்டோக்களை சிவில் உடையில் வந்த பொலிசார் அடித்து விரட்டியுள்ளனர். இதனால் அதையே நம்பி வாழ்க்கை நடத்தும் ஆட்டோ சாரதிகள் அங்கிருந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர்.

இப் போராட்டத்தின் காரணமாக ஹொரவப்பொத்தானை வீதி ஊடான போக்குவரத்து இரண்டு மணித்தியாலங்கள் பாதிப்படைந்திருந்தது.

1
4

3 5 6

13