வவுனியாவில் மினி சூறாவளியால் 36 குடும்பங்கள் பாதிப்பு : 26 வீடுகள் சேதம்!!

1170

வவுனியா, பறநாட்டாங்கல், பனிக்கர் புளியங்குளம் பகுதியில் ஏற்பட்ட மினி சூறாவளியால் 36 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதுடன், 26 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பாதிப்புற்ற பகுதிகளை பார்வையிட்ட பின் கருத்து தெரிவிக்கையில், வவுனியா, பறநாட்டங்கல், பனிக்கர் புளியங்குளம் பகுதியில் நேற்று (28.04) மாலை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்த போது மினி சூறாவளி ஏற்பட்டது.

இதன் காரணமாக அப் பகுதியில் உள்ள தற்காலிக மற்றும் அரை நிரந்தர வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன், பல வீடுகளும் சேதமடைந்தன. இதனால் மழை நீர் வீட்டுக்குள் சென்றமையால் மக்களது உடுபுடவைகள் மற்றும் அனைத்தும் பொருட்களும் நீரில் நனைந்தன.

இதனையடுத்து அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் அம்மக்கள் உடனடியாக தங்க வைக்கப்பட்டதுடன், அவர்களது வீட்டுக் கூரைகளுக்கு தற்காலிகமாக போடுவதற்காக மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்ததால் 20 தறப்பால்கள் வழங்கப்பட்டது.

இக் காற்று காரணமாக 5 வீடுகளின் கூரைகள் முழுமையாகவும், 22 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது. தென்னை, வாழை, பலா போன்ற பயன்தரு மரங்களும் நிலத்துடன் சாய்ந்து விழுந்துள்ளன. இம் இம் மக்களுக்கான உதவிகளையும், வீடுகளுக்கான இழப்பீடுகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ சேவைகள் நிலைய உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாதிப்படைந்த மக்களைப் பார்வையிட்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் பாதிப்படைந்த மக்களுக்கு தேசிய வீடமைப்பு அதிகார சபை ஊடாக வீட்டுத்திட்டம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவை வழங்கப்படும் என தெரிவித்ததுடன், இம் மக்களுக்கான அனர்த்த உதவித் திட்டங்கள வழங்கல் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ சேவைகள் நிலைய மாவட்ட உதவிப் பணிப்பாளருடனும் கலந்துரையாடியிருந்தார்.