வவுனியா கனகராயன்குளம் பகுதியில் தேடுதலின் போது ஆயுதங்கள் மீட்பு : ஹோட்டல் உரிமையாளர் கைது!!

762

வவுனியா, கனகராயன்குளம் தாவீது ஹோட்டல் மற்றும் அவரது வீடு என்பன சோதனை செய்யப்பட்ட போது ஆயுதங்கள் மீட்கப்பட்டது. இச் சம்பவம் தொடர்பில் அதன் உரிமையாளர் கனகராயன்குளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, கனகராயன்குளம், ஏ9 வீதியில் உள்ள தாவீது ஹோட்டலில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாக வவுனியா தீர்க்கப்படாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் சோதனை மேற்கொண்டதுடன்,

மேலதிக தேடுதல் நடவடிக்கைகாக புளியங்குளம் விசேட அதிரடிப் படையினர், இராணுவத்தினர் மற்றும் கனகராயன்குளம் பொலிசார் ஆகியோரையும் வரவழைத்தனர்.

இதனையடுத்து நேற்று மாலையில் இருந்து தாவீது ஹோட்டல், அதன் உரிமையாளரின் வீடு, மலசலகூடம் என அப்பகுதி சல்லடை போட்டு தேடப்பட்டது.

இதன்போது மலசலகூட தாவரம் அருகே மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் ஆயுதங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவை கைப்பற்றப்பட்டன.

அந்தவகையில் ஆர்பிஜி செல்கள்-02, கைக்குண்டுகள்-01, மிதிவெடிகள்-03, சொக்கன் ரவைகள்-17, ஆள் அடையாள அட்டைகள்-06 என்பன கைப்பற்றப்பட்டன.

இதனையடுத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் குறித்த தாவீது ஹோட்டல் உரிமையாளரை நேற்று இரவு 8.30 மணியளவில் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா தீர்க்கப்படாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரும், கனகராயன்குளம் பொலிசாரும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.