வவுனியாவில் இருவர் கைது : ஒருவரிடம் வாள்களும் மீட்பு!!

278

வவுனியா, பட்டானிச்சூர் புளியங்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இரு வாள்களுடன் இளைஞர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வர்த்தக நிலையம் ஓன்றில் பிறிதொரு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, பட்டானிச்சூர் புளியங்குளம், வேங்குளம் ஆகிய இடங்களில் நெளுக்குளம் பொலிசார் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்போது 37 வயதுடைய இளைஞர் ஓருவர் வாள்கள் இரண்டினை மறைத்து வைத்திருந்தமை கண்டு பிடிக்கப்பட்டது.

வீட்டின் முற்பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றினில் குழாய் ஒன்றுக்குள் வைக்கப்பட்டு சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது. உடனடியாக அதனை கைப்பற்றிய பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பில் அக் கால்வாய் காணப்பட்ட வீட்டு உரிமையாளரான 37 வயது இளைஞன் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன், வவுனியா நகர்ப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் வர்த்தக நிலையம் ஓன்றில் கடமையாற்றியவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை வவுனியாவில் பாதுகாப்பிற்காக 31 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர் எனவும், வவுனியா நகரம், பசார் வீதி, பட்டக்காடு, பட்டானிச்சூர் புளியம்குளம், அரபா நகர், மதீனாநகர், செட்டிகுளம் என பல்வேறு பகுதிகளிலும் உள்ள வர்த்தக நிலையங்கள், வீடுகள், பொதுக் கட்டிடங்கள், வீதிகள், வாகனங்கள் என்பன சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன், வவுனியாவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வவுனியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.