வவுனியாவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி ஹரிஸ்ணவியின் வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு!!

611

வவுனியா உக்கிளாங்குளம் பகுதியில் தனிமையிலிருந்தபோது பாலியல் துன்புறுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 14 வயதுச் சிறுமியான பாடசாலை மாணவி கங்காதரன் ஹரிஸ்ணவியின் வழக்கு விசாரணைகள் கடந்த மூன்றாண்டுகளாக இடம்பெற்று வருகின்றன.

இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது எவ்விதமான முன்னேற்றமும் இன்றி அடுத்த தவணைக்காக திகதியிடப்பட்டுக் கொண்டு செல்வதாகவும் மகளின் கொடூரச்சம்பவம் இடம்பெற்று மூன்றாண்டுகள் கடந்தும் நீதியை நிலை நாட்டுவதில் காலதாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக ஹரிஸ்ணவியின் தந்தை கண்ணீருடன் தெரிவிக்கின்றார்.

இன்றைய தினம் வழக்கு விசாரணைகளுக்காக திறந்த நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது சந்தேக நபர் மன்றில் ஆஜராகியிருந்தார். பெண்கள் அபிவிருத்தி நிலையம் இவ்வழக்கு விசாரணைகளை முன்னெடுத்துச் செல்கின்றது.

கடந்த வழக்கு விசாரணைகளின் போதும் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து அறிக்கை வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மன்றில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இன்றைய தினமும் வழக்கு விசாரணைகளின்போது சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிக்கை மன்றில் பாரப்படுத்தப்படவில்லை. அறிக்கையில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் வழக்குத் திகதியிடப்பட்டுள்ளது அடுத்த வழக்குத்தவணை 30.09.2019 திகதியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிக்கையில் காலதாமதங்கள் ஏற்படுவதனால் வழக்கு விசாரணைகளில் எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை மாறாக திகதியிடப்பட்டுக்கொண்டு செல்வதால் மகளின் கொடூரச்சம்பவத்திற்கு நீதி கிடைக்காமல் சென்றுவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் கவலையுடன் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.