வவுனியா, நகரசபைக்கு சொந்தமான நீண்டகாலமாக பயன்படுத்தபடாத வாகனம் ஒன்றில் இருந்து சிறிய ரக வெடி மருந்தும், வயரும் இன்று (02.05.2019) வவுனியா பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா நகரசபை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கழிவகற்றும் வாகனம் ஒன்று பழுதடைந்த நிலையில் உள்ளமையால் நீண்டகாலமாக பயன்படுத்தப்படவில்லை.
குறித்த வாகனத்தை திருத்த வேலைக்காக இன்று (02.05.2019) தயார் செய்தபோது வாகனத்தின் பின் பகுதியில் பொலித்தீன் பொதி ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் சிறிய ரக வெடிமருந்து 50 கிராம் கண்டுபிடிக்கப்பட்டது.
அத்துடன் வெடிக்க வைப்பதற்கு பயன்படும் 33 மீற்றர் நீளமான வயரும், வேறு வேறு மாவட்டங்களையைச் சேர்ந்த 3 அடையாள அட்டைகளும் கண்டு பிடிக்கப்பட்டன.
இதனையடுத்து வவுனியா பொலிசாருக்கு நகரசபையினர் தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா பொலிசாரும், விசேட அதிரடிப் படையினரும் குறித்த வெடி மருந்தை பரிசோதித்து அதனை மீட்டு எடுத்துச் சென்றனர்.
இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.





