சென்னையில்16 மணிநேர சத்திர சிகிச்சையில் வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட குழந்தைகள்!!

554

two_child_002தன்ஸானியா நாட்டைச் சேர்ந்த ஒட்டிப் பிறந்த 9 மாதமே ஆன ஆண் குழந்தைகள் 16 மணி நேரம் நடந்த சத்திர சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டன.

தன்ஸானியா நாட்டில் 9 மாதமே ஆன எரிகா மற்றும் எல்யூடி என்ற இடுப்புக்கு கீழே ஒட்டிப் பிறந்த ஆண் குழந்தைகள் சிகிச்சைக்காக கடந்த யூன் மாதம் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்.

இந்த குழந்தைகளின் முதுகு தண்டுவடத்தின் கீழ் பகுதி மற்றும் சிறுநீர் பாதை மற்றும் ஆண் உறுப்பு, மலம் செல்லும் பாதை ஆகியவை ஒட்டியே இருந்தது.

இதனால் குழந்தைகளை பராமரிக்க பெற்றோர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதையடுத்து சத்திர சிகிச்சை செய்து குழந்தைகளை தனித்தனியாக பிரிக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

இந்நிலையில் ஒட்டிப்பிறந்த குழந்தைகளை பிரிக்கும் சத்திர சிகிச்சை நேற்று காலை 9 மணிக்கு சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தொடங்கியது.

சிறுநீரக அறுவை சிகிச்சை துறை மருத்துவர் வெங்கட் ஸ்ரீபதி மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ரோஷினி ஆகியோர் தலைமையில் சுமார் 25 மருத்துவர்கள் சத்திர சிகிச்சை பணியில் ஈடுபட்டனர்.

சத்திர சிகிச்சை மூலம் முதுகு தண்டுவடத்தின் கீழ்பக்கத்தில் இருந்து ஒன்றோடு ஒன்று ஒட்டியுள்ள பகுதி முதலில் பிரிக்கப்பட்டது. இதையடுத்து ஒன்றோடு ஒன்று ஒட்டி இருந்த மலம் கழிக்கும் பாதைகளை மருத்துவர்கள் பிரித்தனர். பின்னர் ஆண் உறுப்பு மற்றும் சிறுநீர் செல்லும் பாதை உள்ளிட்ட இணைந்த பாகங்களை அறுவை சிகிச்சை மூலம் தனித்தனியாக மருத்துவர்கள் பிரித்தனர்.

கடைசியாக சத்திர சிகிச்சைக்காக வெட்டிய இடங்கள் பிளாஸ்டிக் சேஜரி மூலம் சரி செய்யப்பட்டது. குழந்தைகளை பிரிக்கும் சத்திர சிகிச்சை அதிகாலை 1 மணி வரை நடைபெற்றது.

இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனை சார்பில் வெளியிட்ட அறிவிப்பில் காலை 9 மணிக்கு தொடங்கிய சத்திர சிகிச்சை சுமார் 16 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றது. தற்போது குழந்தைகள் நல்ல முறையில் ஆரோக்கியமாக உள்ளனர்.

மேலும் குழந்தைகளின் உடல் வெப்பம், இதய துடிப்பு, ரத்த ஓட்டம், ரத்த அழுத்தம் சரியாக இயங்கி வருகிறது என்றும் ஆனாலும் குழந்தைகள் இரண்டும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.