40 வயது மாமியாரை கத்தியால் குத்தி கொன்ற 32 வயது மருமகன் : குடிபோதையில் நடந்த வெறியாட்டம்!!

865

தமிழகத்தில் மாமியாரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகனை பொலிசார் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (32). இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு சுஷ்மிதா (24) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

தம்பதிக்கு 4 வயதில் மகள் உள்ள நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் சதீஷ்குமாருக்கும், சுஷ்மிதாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் தனது கணவருடன் கோபித்துக் கொண்டு சுஷ்மிதா தனது தாய் சித்ரா (40), வீட்டிற்கு சென்றுவிட்டார். இதற்கிடையே சதீஷ்குமார் தனது மனைவியை குடும்பம் நடத்த வருமாறு பலமுறை அழைத்தும் அவர் வர மறுத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சதீஷ்குமார், குடிபோதையில் மாமியார் வீட்டிற்கு சென்று மாமியார் சித்ராவிடம் சுஷ்மிதாவை தன்னுடன் வாழ்வதற்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுள்ளார்.

அதற்கு சித்ரா தன் மகளை அனுப்பி வைக்க மறுத்துள்ளார். இதனால் சித்ராவிற்கும், சதீஷ்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார், மறைத்து வைத்திருந்த காய்கறி வெட்டும் கத்தியால் சித்ராவின் வயிற்று, கழுத்துப் பகுதியில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதில் படுகாயமடைந்த, சித்ரா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து சித்ராவின் சடலத்தை கைப்பற்றினார். பின்னர் தலைமறைவாக இருந்த சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.