வவுனியாவில் எழுநூறு வெளிநாட்டு பிரஜைகளை குடியேற்றுவது தொடர்பான கலந்துரையாடல் வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுவரும் நிலையில் ஊடகவியலாளருக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் குறித்த கலந்துரையாடல் இன்று (08.05) நடைபெற்று வருகின்றது.
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.கனீபா தலைமையில் நடைபெற்று வரும் குறித்த நிகழ்விற்குச் சென்ற ஊடகவியலாளர்கள் பொலிசாரின் உதவியுடன் வெளியேற்றப்பட்டு மூடிய அறைக்குள் ரகசியமாக கலந்துரையாடல் நடைபெற்று வருகின்றது.
நாட்டில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பின் காரணமாக ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு குறித்த வெளிநாட்டு பிரஜைகளை வவுனியாவில் தங்கவைப்பதற்கான ரகசிய கூட்டம் வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்று வருகின்றது.
வவுனியா பூந்தோட்டத்தில் வெளிநாட்டு பிரஜைகள் எழுநூறு பேர் தங்கவைக்கப்படுவது தொடர்பாக நடைபெற்றவரும் ரகசிய கலந்துரையாடலில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன கலந்து கொண்டுள்ளதுடன் வவுனியா மாவட்ட பிரதேச செயலாளர்கள், உள்ளுராட்சி மன்றத்தின் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
குறித்த கலந்துரையாடலிற்கு பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மத குருமார்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





