
நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தினையடுத்தும் வைத்தியசாலைக்கு விடுக்கப்பட்ட வெடிக்குண்டு எச்சரிக்கையினையடுத்தும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து வைத்தியசாலை வாயிலின் அருகே சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு வைத்திசாலையினுள் செல்லும் அனைவரும் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். அத்துடன் தலைக்கவசத்தை வைத்தியசாலை வளாகத்திற்குள் கொண்டு செல்லதற்கும் இராணுவத்தினர் தடை விதித்துள்ளனர்.
தலைக்கவசத்திற்கு விதிக்கப்பட்ட தடையினையடுத்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள சில வர்த்தக நிலையங்களில் தலைக்கவசம் வைப்பதற்கு ரூபா 10 அறவிடப்படுகின்றது.
தலைக்கவச தடை விதிப்பினால் தினசரி வைத்தியசாலைக்கு செல்லும் ஆயிரத்திற்கு மேற்பட்ட நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் ரூபா 10 கட்டணம் செலுத்தி தலைக்கவசத்தினை வர்த்தக நிலையங்களில் ஒப்படைத்து செல்கின்றனர்.
தினசரி மூன்று நேரமும் நோயாளர்கள் பார்வையிடுபவர்கள் மற்றும் நோயாளர்கள் என ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வைத்தியசாலைக்கு சமூகமளிக்கின்றனர்.
அண்ணளவாக ஒரு நாளுக்கு எழுநூறுக்கு மேற்பட்டவர்கள் மோட்டார் சைக்கிலில் வைத்தியசாலைக்கு வருகை தருகின்றனர். (700 x 10) 7000 ரூபாய் ஒரு நாளுக்கான வருமானமாக காணப்படுகின்றது.
அத்துடன் சில இடங்களில் தலைக்கவசங்கள் எவ்வித பாதுகாப்பும் இன்றி வீதியில் வைக்கப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. (கட்டணம் செலுத்தபட்ட இடங்களில்)
எனவே உரிய அதிகாரிகள் இவ்விடயத்தில் தலையிட்டு தலைக்கவச தடையினை நீக்க வேண்டும் அல்லது நகரசபையினரோ வைத்தியசாலை நிர்வாகத்தினரோ இதற்கான மாற்று ஏற்பாட்டினை மேற்கொள்ள வேண்டுமேன பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
வைத்தியசாலையில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் தலைக்கவசத்தினை எவ்வித சோதனைகளும் இன்றி வைத்தியசாலைக்குள் எடுத்துச் செல்ல பாதுகாப்பு தரப்பினர் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





