இந்தியா தென் ஆபிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் ஆட்ட நேர முடிவில் தென் ஆபிரிக்க அணி 213 ஓட்டங்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்த நிலையில் திணறி வருகிறது.
முன்னதாக நேற்றைய ஆட்டத்தை தொடர்ந்த இந்தியா வீரர்களால், 255 ஓட்டங்களுக்கு மேல் வெறும் 25 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டோனி வெறும் 19 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். அரை சதம் எடுக்க வேண்டிய நிலையில் இருந்த ரஹானே 47 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்தவர்களுமே வந்த வேகத்தில் பெவிலியனுக்குத் திரும்ப, 280 ஓட்டங்களுக்கு இந்தியா ஆட்டமிழந்தது. தென் ஆபிரிக்க அணிக்காக ஃபிலண்டர் 4 விக்கெட்டுகளையும், மோர்கல் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அடுத்து தனது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா நிதானமாக ஓட்டங்களைச் சேர்த்தது. துவக்க ஆட்டக்காரர்கள் ஸ்மித்தும் பீட்டர்சனும் பதட்டமின்றியே காணப்பட்டனர். உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி 21 ஓட்டங்களை எடுத்திருந்தது.
இடைவேளைக்கு பிறகு சில ஓவர்களிலேயே பீட்டர்ச்சன் இஷாந்த் சர்மாவின் பந்தில் 21 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். அணித் தலைவர் ஸ்மித்தும், அடுத்து களமிறங்கிய அம்லாவும் அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். இருவரும் அவசரப்படாமல் ஆடினாலும், மோசமான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டவும் தவறவில்லை. 98 பந்துகளில் ஸ்மித் அரை சதத்தைக் கடந்தார்.
தேனீர் இடைவேளை வரை இந்த ஜோடி நிலைத்து ஆடினர். ஸ்மித் 62 ரன்களுடனும், அம்லா 30 ரன்களுடனும் ஆட்டம் தொடர, 3 ஓவர்கள் கழித்து இஷாந்த் சர்மா வீசிய ஆட்டத்தின் 38வது ஓவர் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. அந்த ஓவரின் முதல் பந்தில் அம்லாவை ஆட்டமிழக்கச் செய்த இஷாந்த், அடுத்த பந்திலேயே நட்சத்திர வீரர் காலிஸையும் ஓட்டம் எதுவும் பெறாத நிலையில் ஆட்டமிழக்கச் செய்தார்.
சில ஓவர்கள் கழித்து பந்து வீசவந்த ஷமியும், தன் பங்குக்கு ஒரே ஓவரில் டுமினி மற்றும் டி வில்லியர்ஸ் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தினார். அப்போது தென் ஆபிரிக்காவின் ஸ்கோர் 146 ஓட்டங்களை மட்டுமே. அதற்குள் 6 விக்கெட்டுகளை அந்த அணி இழந்திருந்தது.
பின்பு ஆட வந்த பந்து வீச்சாளர் ஃபிலண்டர், ப்ளெஸிஸுடன் ஜோடி சேர்ந்த அணியைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கினார். இந்திய பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆடிய இருவருக்கும் விக்கெட்டை காப்பாற்றிக் கொள்வதே முக்கியமானதாக இருந்தது. ஆனால் பின்னர் சுதாரித்த இரு துடுப்பாட்ட வீரர்களும் கொஞ்சம் கொஞ்சமாக ஓட்டங்களை சேர்க்க ஆரம்பித்தனர்.
கடைசி வரை இருவரையும் ஆட்டமிழக்கச் செய்ய வகுத்த வியூகங்கள் பலிக்காமல் போக இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்கா 213 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து, இந்திய அணியை விட 67 ஓட்டங்கள் பின்தங்கியிருந்தது.
ஃபிலண்டர் 48 ஓட்டங்களுடனும், ப்ளெஸிஸ் 17 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.





