குழந்தைகளுடன் கதறும் மனைவி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொலிஸாரின் லஞ்ச கொடுமையால் பார் உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த நெல்லையப்பன் என்பவர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8 இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பார் வைத்து நடத்தி வருகிறார்.

இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். அதிமுக பிரமுகர் ஆனந்த் என்பவரின் ஆதரவுடன் இவர் நடத்தி வந்த பார் கடையின் வாடகை அடிக்கடி உயர்த்தப்பட்டு வந்துள்ளது. அதோடு அல்லாமல் பொலிஸாருக்கும் அதிகம் லஞ்சம் கொடுத்து வந்துள்ளார். இவற்றை கட்ட முடியாமல் திணறிய நெல்லையப்பனுக்கு கடன் சுமையும் அதிகரித்துள்ளது.

இதனால் மனமுடைந்த நெல்லையப்பன் ஆனந்தன் மீது திருப்போரூர் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் அங்கு புகாரை பொலிஸார் வாங்கவில்லை என தெரிகிறது. இதனையடுத்து மாமல்லபுரம் டிஎஸ்பி அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுத்துள்ளார். அந்த புகார் ஆனந்தன் மற்றும் திருப்போரூர் இன்ஸ்பெக்டர் மீது என்பதால், அங்கும் புகாரை வாங்க மறுத்துள்ளனர்.

உடனே நெல்லையப்பன் டிஎஸ்பி அலுவலகத்திலே தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். உடனடியாக அவரை மீட்ட பொலிஸார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இறப்பதற்கு முன்னர் செங்கல்பட்டு நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்தார்.

இந்த புகாரின் அடைப்படையில் தற்போது குற்றம் சுமத்தப்பட்ட மாமல்லபுரம் டிஎஸ்பி, திருப்போரூர் காவல் ஆய்வாளர் கண்ணன் மற்றும் அதிமுக பிரமுகர் ஆனந்தன் ஆகிய மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.




