வவுனியாவில் கிணற்றில் வீழ்ந்த யானைக்குட்டி 7மணி நேரப் போராட்டத்தின் பின்னர் மீட்பு!!

833

யானைக்குட்டி மீட்பு

கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியில் நேற்று இரவு பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி வீழ்ந்த 6 மாதமான யானைக்குட்டி ஒன்று இன்று பிற்பகல் 3 மணிவரையான 7மணிநேரப் போராட்டத்தின் பின்னர் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டு காட்டிற்குள் விடுவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா கனகராயன்குளம், பெரியகுளம் ஆயுள் வேத வைத்தியசாலை பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றிற்குள் யானைகுட்டி ஒன்று நேற்று இரவு தவறி வீழ்ந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை 8மணியளவில் யானைக்குட்டியை மீட்கும் போராட்டத்தில் கனகராயன்குளம் பொலிசார், வவுனியா மற்றும் கிளிநொச்சி வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர்கள்,

கிராம மக்கள் இணைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது கிணறு அகழப்பட்டு கிணற்றிலிருந்து யானை உயிருடன் மீட்கப்பட்டு மிருக வைத்திய அதிகாரியின் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தேக ஆரோக்கியப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு பிற்பகல் 3.30மணியளவில் காட்டுப்பகுதியில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு தண்ணீர் தேடி மக்கள் குடியிருப்புப்பகுதிக்குள் புகுந்த யானைகுட்டியே இவ்வாறு கிணற்றிற்குள் தவறி வீழ்ந்துள்ளது. எனினும் பாதுகாப்பு நிலையிலிருந்து பொலிசார், பொதுமக்கள், வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட நடவடிக்கையில் சுமார் 7மணி நேரப் போராட்டத்தின் பின்னர் பிற்பகல் 3.30 மணியளவில் உயிருடன் மீட்கப்பட்டு யானை மருத்துவப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு காட்டிற்குள் விடுவிக்கப்பட்டுள்ளது.