குலைநடுங்க வைத்த அந்த 3 நிமிட வீடியோ : தாயார், சகோதரர் மரணத்தில் தந்தையை சிக்க வைத்த மகள்!!

336

தந்தையை சிக்க வைத்த மகள்

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மனைவி மற்றும் சொந்த பிள்ளையைக் கொலை செய்தவர் பொலிசாரிடம் அளித்த வாக்குமூலம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் பொலிசாரிடம் சிக்கிய 3 நிமிட காணொளி காட்சியே முக்கிய குற்றவாளியை கைது செய்ய உதவியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த சுரேஷ் பாபு, கீதாபாய் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். சுரேஷ் பாபு தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரிவில் பணியாற்றி வந்துள்ளார். முன்னர், சிட்பண்ட் நடத்தி வந்த இந்தத் தம்பதி, அதனால் ஏற்பட்ட கடுமையான கடன் சுமையில் சிக்கித் தவித்து வந்துள்ளனர். தொழிலில் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட பல்வேறு இடங்களில் கடன் வாங்கி, அந்த கடனுக்கான வட்டியையும் செலுத்த முடியாமல் தவித்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் அவரால் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் போனது. இதனையடுத்து தற்கொலை முடிவை கையில் எடுத்துள்ளனர். தங்கள் குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு தாங்களும் தற்கொலை செய்துகொள்ள இருவரும் முடிவு செய்துள்ளனர்.

திட்டமிட்டபடி தனது 12 வயது மகனைக் கொலை செய்துள்ளார் சுரேஷ் பாபு. இதை அவரின் மகள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். 3 நிமிடங்களுக்கு மேல் ஓடக்கூடிய அந்த வீடியோவில் அந்தக் கொடூர சம்பவம் எப்படி அரங்கேறியது எனப் பதிவாகியுள்ளது.

சுரேஷ் பாபு தன் மகனைக் கொலை செய்கிறார். அவரின் 17 வயது மகள் தம்பியை விட்டுவிடுமாறு கதறுகிறாள். மகன் இறந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் கீதாபாய் தலையால் சுவரில் முட்டிக்கொள்கிறார். இதையடுத்து, கீதாபாய் தன் மகளிடம் இருந்து செல்போனை பறித்துவிடுகிறார்.

இதன்பின்னர் கீதாபாயும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அடுத்து மகளைக் கொலை செய்ய முடிவுசெய்த சுரேஷ் பாபுவிடம் அவரது மகள் கெஞ்சியதை அடுத்து அவர் தற்கொலை முடிவைக் கைவிட்டுள்ளார். இதனையடுத்து, அக்கம்பக்கத்தினரை அழைத்து தமது மகனைக் கொலைசெய்துவிட்டு மனைவி தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி காவல்துறையினரிடம் மனைவி தற்கொலை செய்துகொண்டதாகவேக் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் பதிவான வீடியோவைப் பார்க்கும் வரை காவல்துறையினரும் சுரேஷ் பாபு கூறியதை நம்பியுள்ளனர். ஆனால், தந்தை செய்த கொடூரச் செயலை உறவினர்களிடம் அவரின் மகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்தே இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தொடர்ந்து சுரேஷ் பாபு மற்றும் அவரின் மகளிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் தந்தை மற்றும் மகள் இருவரும் முரணான தகவலைத் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிசார் அந்த வீடியோவைக் காட்டிய பின்னர் சுரேஷ் பாபு நடந்தவற்றைக் கூறியுள்ளார். மகனைக் கொலை செய்ததாக அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணையில், சிட்பண்ட் நிறுவனத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட கடன் வாங்கியதாகவும், கடன் சுமை மேலும் அதிகரித்ததால்.வேறு வழி தெரியவில்லை என காவல்துறை விசாரணையில் சுரேஷ் பாபு தெரிவித்துள்ளார்.