11வது சர்வதேச படவிழா சென்னையில் கடந்த 12ம் திகதி தொடங்கியது. நடிகர்கள் கமல்ஹாசன், அமீர்கான் ஆகிய இருவரும் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்கள். 8 நாட்களாக நடந்த இந்த விழாவில், 58 நாடுகளை சேர்ந்த 163 படங்கள் திரையிடப்பட்டன.
நிறைவு நாள் நிகழ்ச்சி, சென்னையில் நேற்று இரவு நடந்தது. அதில், கவுதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில், ராம் இயக்கி, ஜே.சதீஷ்குமார் வெளியிட்ட தங்க மீன்கள் படத்துக்கு முதல் பரிசு கிடைத்தது. அந்த படத்தை வெளியிட்ட ஜே.சதீஷ்குமாருக்கு 1 லட்சமும், இயக்குனர் ராமுக்கு 2 லட்சமும் வழங்கப்பட்டது.
டாக்டர் ராமதாஸ் தயாரித்து, ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கிய ஹரிதாஸ் படத்துக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. தயாரிப்பாளர் டாக்டர் ராமதாஸ், இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலன் ஆகிய இருவருக்கும் தலா 1 லட்சம் வழங்கப்பட்டது. பாலா இயக்கிய பரதேசி படத்தில் நடித்தற்காக அதர்வாவுக்கு விசேட விருது வழங்கப்பட்டது.
தங்க மீன்கள்’ படத்தில் நடித்த சிறுமி சாதனா, ஹரிதாஸ் படத்தில் நடித்த சிறுவன் பிருதிவிராஜ் ஆகிய இருவருக்கும் சிறப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இசையமைப்பாளர் அனிருத்துக்கு அமிதாப்பச்சன் விருது வழங்கப்பட்டது. விருது பெற்றவர்களின் பெயர்களை, நடுவர் குழுவில் ஒருவரான நடிகை ஸ்ரீப்ரியா அறிவித்தார்.
நடிகர் கார்த்தி, நடிகை அனுஹாசன் ஆகிய இருவரும் விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள். விழாவில் நடிகைகள் சுஹாசினி, பூர்ணிமா பாக்யராஜ், ரோகிணி, பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமார், இந்தி இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா உள்பட ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.





