வெளிநாட்டில் குளியல் தொட்டியில் இறந்து கிடந்த இந்திய சிறுமி : தாயே கொன்றது அம்பலம்!!

293

இறந்து கிடந்த இந்திய சிறுமி

அமெரிக்காவில் வளர்ப்பு மகளை கொலை செய்த இந்திய வம்சாவளி பெண்ணுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நியூயோர்க்கில் உள்ளது குயின்ஸ் நகரம். இங்கு வசிப்பவர் சுக்ஜிந்தர் சிங். இவரது மகள் அஷ்தீப் கவுர் (9).

மனைவியை பிரிந்த சிங், இந்திய வம்சாவளியை சேர்ந்த ஷம்தாய் அர்ஜூன் என்கிற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். பின் சிங், ஷம்தாய், அஷ்தீப் கவுர் ஆகிய மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் திகதி சிறுமி அஷ்தீப் கவுர் குளியலறையில் உயிரிழந்திருந்தாள். குளியல் தொட்டிக்குள் தவறி விழுந்து இறந்ததாக ஷம்தாய் தெரிவித்தார். ஆனால், அஷ்தீப் கவுர் கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்டிருப்பது உடற்கூறாய்வு அறிக்கையில் தெரியவந்தது.

இதையடுத்து, வளர்ப்பு மகளை கொன்றதாக ஷம்தாய் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவர் குற்றவாளி என குயின்ஸ் நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது.

தண்டனை விவரம் அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என கூறியிருந்தது. அதன்படி, நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் ஷம்தாய்க்கு 22 வருடம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.