சிங்கப்பூரில் நடந்த கலவரம் காரணமாக 52 இந்தியர்களை அந்நாட்டு அரசு இன்று நாடு கடத்தியுள்ளது. மேலும் 4 பேரை நாடு கடத்தவும் அந்நாடு முடிவு செய்துள்ளது.
சிங்கப்பூர் லிட்டில் இந்தியா நகரில் கடந்த மாதம் தமிழகத்தைச் சேர்ந்த சக்திவேலு குமாரவேலு தனியார் பேருந்து மோதி இறந்தார்.
இதையடுத்து அங்கு கலவரம் வெடித்தது. 40 வருடங்களில் மிக மோசமான இந்த வன்முறையில் 16 பொலிஸ் வாகனங்களும், 25 பொதுவான வாகனங்களும் தீ வைத்து கொளுத்தப்பட்டன. 39 பொலிஸார் வன்முறையாளர்களின் கல்வீச்சில் காயமடைந்தனர்.
இந்த வன்முறையில் ஈடுபட்டதாக 52 பேரும் நாடு கடத்தப்பட்டதாக சிங்கப்பூர் அரசு கூறியுள்ளது. நாடு கடத்தப்பட்ட இவர்கள் அனைவரும் எப்பொழுதும் சிங்கப்பூரில் நுழைய முடியாதவாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் கல்வீச்சில் ஈடுபடாமல், போராட்டம் நடத்திய மேலும் 200 பேருக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





