இறந்த நண்பனின் உடலுடன்..
தஞ்சாவூர் மாவட்டத்தில் காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் உடலை, அவருடைய நண்பர்கள் அனைவரும் சேர்ந்து கண்ணீருடன் கிரிக்கெட் மைதானத்தை சுற்றிவந்துள்ள சோக சம்பவம் நடந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த அழகப்பன் (27) கிரிக்கெட் விளையாடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர். அரண்மனை அருகே உள்ள பீட்டர் பள்ளி மைதானத்தில் தினமும், காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளிலும் விளையாடும் பழக்கம் கொண்டவர்.
அதோடு மட்டுமில்லாமல் பக்கத்து ஊர்களில் நடக்கும் போட்டிகளிலும் பங்கேற்று அதிக கிண்ணங்களை வென்று வந்துள்ளார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவருடைய காதல் தோல்வியில் முடிந்ததால், சில நாட்களாகவே சோகமாக இருந்து வந்துள்ளார்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திடீரென அழகப்பன் எலி மருந்தை சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து வேகமாக மீட்கப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயரிழந்துள்ளார். அவருடைய உடலை ஆம்புலன்சில் கொண்டு வரும்போதே ஏராளமான இளைஞர் பட்டாளம் முன்னும், பின்னுமாக இருசக்கர வாகனங்களில் வந்துகொண்டிருந்துள்ளனர்.
கிரிக்கெட் மைதானம் அருகே அம்புலன்ஸ் வந்ததும், மைதானத்திற்குள் விடுமாறு கூறியுள்ளனர். மைதானத்தை மூன்று முறை சுற்றியதும், நடுப்பகுதியில் சிறிது நேரம் நிறுத்தி வைத்து அனைவரும் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்.
பின்னர் உடலை ஊர்வலமாக தூக்கிக்கொண்டு இறுதிச்சடங்கினை முடித்துள்ளனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தையும், இளைஞர்களின் செயல் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.