கதறிய இளம்பெண்
தமிழகத்தில் ஓடும் காரில் இருந்து பெண் ஒருவர் வெளியே தள்ளிவிடப்படும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ள நிலையில் கீழே விழுந்த பெண் கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார். இது தொடர்பாக கோவையை சேர்ந்த ஆர்த்தி என்பவர் கூறுகையில், கடந்த மாதம் தனது கணவரும் அவர்களது பெற்றோரும், தன்னை ஓடும் காரில் இருந்து வெளியே தள்ளிவிட்டதாகவும் தன்னை கொல்ல முயற்சித்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் நீண்ட நாட்களாக கணவர் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், இதன் காரணமாக கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்ததாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, தனது 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு ஆர்த்தி தனது கணவருடன் சேர்ந்து வாழ சென்றுள்ளார். ஆனால் ஆர்த்தியின் கணவர் அருண் மீண்டும் அவரை கொடுமைப்படுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து, ஊட்டி காவல் நிலையத்தில் கணவருக்கு எதிராக புகார் அளித்துள்ளார் ஆர்த்தி.
பின்னர் பொலிசாரின் சமரச பேச்சுவார்த்தையை தொடர்ந்து, அருண் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துள்ளார். இந்நிலையில் தனது பெற்றோரிடம் இருந்து ஆர்த்தியை தனியாக வைப்பதாக எழுதி கொடுத்த அருண், கடந்த மாதம் 9ஆம் திகதி கோவையில் தனது பெற்றோரை காரில் அழைத்துக் கொண்டு வந்துள்ளார்.
அப்போது காரில் வாக்குவாதம் ஏற்பட ஆர்த்தி காரிலிருந்து வெளியே தள்ளி விடப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில் ஆர்த்தி கணவர் மற்றும் அவர் குடும்பத்தார் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.