மும்பையில் தாக்குதல் சம்பவம் நடந்த வீட்டை சுருதிஹாசன் காலி செய்து விட்டு புது வீட்டுக்கு குடி போகிறார். சுருதிஹாசன் இந்திப் படங்களில் பிசியாக நடிப்பதால் மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார். அந்த வீட்டில் தனியாகவே அவர் வசித்தார். தாய் சரிகாவும் தங்கை அக்ஷராவும் வேறு பகுதியில் குடியிருந்தனர்.
கடந்த மாதம் 19ம் திகதி மர்ம நபர் சுருதிஹாசன் வீட்டுக்குள் அத்து மீறி நுழைந்தான். சுருதியை கண் மூடித்தனமாக தாக்கினான். சுருதி உஷாராகி கதவை ஓங்கி சாத்தினார். இதனால் நிலை குலைந்த அவன் தப்பி ஓடிவிட்டான். போலீசார் வழக்கு பதிவு செய்து சுருதிஹாசனை தாக்கியவனை அடையாளம் கண்டு கைது செய்தனர்.
கைதான ஆசாமி பெயர் அசோக் எனறு தெரிய வந்தது. கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் சுருதிஹாசனுடன் தொடர்பு கொண்டு பேசி பத்திரமாக இருக்கும்படி அறிவுறுத்தினர். தாக்குதல் சம்பவம் நடந்த பிறகு சுருதிஹாசன் தோழி வீட்டில் தங்கினார். வீட்டை மாற்றும் படி நெருக்கமானவர்கள் பலர் வற்புறுத்தினர். அந்த வீடு பாதுகாப்பானது அல்ல என்றும் கூறினார்.
இதையடுத்து புது வீட்டுக்கு போக சுருதி முடிவு செய்துள்ளார். மும்பையில் பாதுகாப்பான பகுதியில் வீடு பார்க்கும்படி வீட்டு புரோக்கர்களிடம் கூறியுள்ளார். விரைவில் புது வீட்டுக்கு செல்கிறார். தற்போது சுருதி பாதுகாப்புக்காக இரண்டு பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.