அமீர்கானின் தூம் 3 படம் ஒரே நாளில் 35 கோடி வசூலித்து சாதனை!!

369

dhoom 3அமீர்கானின் தூம் 3 படம் ஒரே நாளில் 35 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. நடிகர் அமீர்கான் இரட்டை வேடத்தில் நடித்துள்ள இந்திப் படம் தூம் 3 முழுக்க முழுக்க அமெரிக்காவின் சிகாகோ நகரிலேயே படமாக்கப்பட்டுள்ளது. இதில் அவருடன் அபிஷேக்பச்சன், ஜாக்கிசெராப், நடிகை கத்ரினாகைப், உதய் சோப்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.

சிகாகோவில் தனது 2 மகன்களுடன் இந்தியன் சர்க்கஸ் நடத்தும் ஜாக்கி செராப் தொழில் நஷ்டப்படவே சிகாகோ வங்கியில் கடன் கேட்கிறார். வங்கி உரிமையாளர்கள் சர்க்கஸ் காட்சியை பார்த்து விட்டு கடன் தர மறுத்து விடு கிறார்கள். இதனால் ஏற்பட்ட வேதனையில் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்கிறார். சிறுவர்களான 2 மகன்களும் வளர்ந்து சிகாகோ வங்கியில் கொள்ளையடித்து கடைசியில் வங்கியையே தகர்த்து உரிமையாளர்களை பழி வாங்குவதே கதை.

ஜீன்ஸ் படத்தில் பிரசாந்த் இரட்டையர்களாக நடித்தது போல் தூம் 3 படத்தில் அமீர்கான் கிராபிக்ஸ் மூலம் இரட்டையர்களாக நடித்துள்ளார். அவரது சர்க்கசுக்கு வேலை கேட்டு வந்து பின்னர் காதலியாக மாறும் கரக்டரில் கத்ரினாகைப், அமீர்கானை பிடிக்க அமெரிக்கா போலீசுக்கு உதவி செய்ய வரும் மும்பை போலீஸ் அதிகாரியாக அபிஷேக்பச்சன் நடித்துள்ளார்.

250 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியானது. இந்தியாவில் மட்டும் 4000 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. சென்னையில் இந்தி மற்றும் தமிழில் வெளியாகியுள்ளது. இதே போல் ஆந்திராவில் தெலுங்கு மொழியில் ரிலீசானது.

படம் வெளியான முதல் நாளில் மட்டும் 36 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதில் இந்தியில் மட்டும் 33.42 கோடிக்கும் தமிழ், தெலுங்கில் 2.80 கோடிக்கும் வசூலாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இது இந்திப் பட உலகில் புதிய சாதனை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் ரூ.300 கோடி வரை வசூலித்துக் கொடுக்கும் என்று எதிர்பார்ப்பதாக அதன் தயாரிப்பாளர் தெரிவித்தார். தூம் 3 படம் வெளியான அதே நாளில்தான் கார்த்தி நடித்த பிரியாணி படமும் ரிலீசானது என்றாலும் தூம் 3 படத்தின் வசூல் பாதிக்கப்படவில்லை என்று சினிமா வர்த்தக பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.