லொறியுடன் மோதுண்ட மோட்டார் சைக்கிள் : ஒருவர் படுகாயம்!!

292

ஒருவர் படுகாயம்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னமுகத்துவார பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியின் சின்னமுகத்துவாரம் பிரதேசத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அக்கரைப்பற்று பிரதேசத்திலிருந்து திருக்கோவில் பிரதேசத்தை நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் சென்ற சிறிய ரக லொறி ஒன்றுடன் மோதுண்டே இந்த விபத்து நடைபெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் லொறியின் முன்பகுதிக்குள் மோதி விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், விடுதி ஒன்றிலிருந்து பிரதான வீதிக்கு குறித்த லொறியை சாரதி நகர்த்த முற்பட்டபோதே இச்சம்பவம் இடமபெற்றிருக்கலாம் என சிலரும், பிரதான வீதியில் இருந்து விடுதிக்குள் பின்புறமாக லொறியை செலுத்த முற்பட்டபோதே இச்சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என ஒரு சிலரும் தெரிவித்தனர்.

இந்நிலையில் உண்மைத்தன்மையை அறிவதற்காக அருகில் உள்ள விடுதிகளில் சீசீடிவி கமரா உள்ளதா என ஆராய்ந்த அக்கரைப்பற்று பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளில் வீட்டின் பாவனைக்காக கொள்வனவு செய்யப்பட்ட அதிகளாவன உணவுப்பொருட்கள் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.