வவுனியாவில் பெண் படுகொலை : கொலையாளியை மோப்பநாயின் உதவியுடன் தேடிவரும் பொலிஸார்!!

366

வவுனியாவில் பெண் படுகொலை

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட துடரிக்குளம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று (21.06.2019) மாலை 7.30 மணியளவில் கொடுரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் குடும்பப் பெண் ஒருவரின் சடலத்தினை செட்டிக்குளம் பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

உள்ளுரில் மிருகங்களை வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்படும் வெங்காய வெடி என அழைக்கப்படும் வெடிபொருள் மூலமே நான்கு பிள்ளைகளின் தாயான 40 வயதுடைய ரவிச்சந்திரன் அந்தோனியம்மா என்ற குடும்பப் பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் சடலத்தினை நேற்றிரவு (21.06.2019) பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் தற்போது வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இக் கொலை தொடர்பாக குறித்த பெண்ணின் கணவர் தலைமறைவாகியுள்ள நிலையில் செட்டிக்குளம் பொலிஸார் இன்றையதினம் மோப்பநாயின் உதவியுடன் வீட்டிற்கு அருகேயுள்ள காட்டுப்பகுதியில் சந்தேகநபரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த பெண் வெங்காய வெடி மூலம் கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் குறித்த கொலையாளி அந்த வெடிபொருள் மூலம் படுகாயமடைந்த நிலையிலேயே தப்பியோடியுள்ளார் என்று செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.