
இந்தியாவில் மத்திய அமைச்சராக இருக்கும் ஸ்மிருதி இரானி தன் மகளுடன் எடுத்த புகைப்படத்தை நீக்கிவிட்டு அதற்கான காரணத்தை ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.
சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில், அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியைத் தோற்கடித்து, மத்திய அமைச்சராகியிருப்பவர் ஸ்மிருதி இரானி.
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, ஜவுளித்துறை அமைச்சராக இருக்கும் ஸ்மிருதி இரானி தன் மகள் ஜோயிஷ் இரானியுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார்.
அதை வைத்து பள்ளிக்கூடத்தில் சக மாணவர்கள் ஜோயிஷ் இரானியைக் கேலியும் கிண்டலும் செய்துள்ளனர். அவருடைய முகத்தோற்றம் குறித்து ஏளனமாக கமென்ட் அடித்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த ஜோயிஷ் இரானி, தன் தாயிடம் கண்ணீருடன் அது பற்றி தெரிவித்ததுள்ளார். மேலும், அந்த செல்பி புகைப்படத்தை நீக்குமாறும் கூறியிருக்கிறார்.
அதைக் கேட்டுக் கோபமடைந்த ஸ்மிருதி இரானி, உடனே அந்தப் புகைப்படத்தை நீக்கிவிட்டார். வகுப்பறையில் ஒரு முட்டாள் கேலிசெய்ததால், என் மகளுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை நீக்கிவிட்டேன் என்று இன்ஸ்டாகிராமில் ஸ்மிருதி தெரிவித்தார்.
அதே நேரத்தில், அந்தப் படத்தை இன்ஸ்டாகிராமிலிருந்து நீக்கியது, தவறான அந்த நபருக்குச் சாதகமான விஷயம் என்பதைப் பிறகு உணர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.




