இலங்கையில் இருந்து போலி கடவுச்சீட்டில் திருச்சி சென்றவர் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து இந்திய ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..
பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிழக்கு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணி 57 வயதான அவர் கார் சாரதியாவார். இவர் கடந்த ஆண்டு இலங்கைக்கு வேலைக்காகச் சென்றார்.
பின்னர், நேற்று காலை 8 மணிக்கு இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் குடிவரவு பிரிவு அதிகாரிகள் மணி கடவுச்சீட்டை சோதனை செய்தனர்.
அப்போது அவர் துறையூர் பாலகிருஷ்ணன் பட்டி என்ற போலி முகவரியில் பெரியசாமி என்ற பெயரில் போலி சடவுச்சீட்டில் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கடந்த சில ஆண்டுக்கு முன் மணி மலேசியா சென்றுவிட்டு, இந்தியா திரும்பியுள்ளார்.
இடையில் இவரது கடவுச்சீட்டு காணாமல் போய்விட்டது. இதற்கு பதிலாக போலி கடவுச்சீட்டு தயாரித்து இலங்கைக்குச் சென்று திரும்பியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
பின்னர் விமான நிலைய பொலிஸாரிடம் மணி ஒப்படைக்கப்பட்டார். பொலிஸார் வழக்கு பதிவு செய்து மணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.





