தொற்றுநோய்கள் பரவும் அபாயம்

வவுனியா இறம்பைவெட்டி குளத்தின் நீர் வற்றி குளத்தில் உள்ள மீன்கள் இறந்து, புழுப்பிடித்துள்ளமையால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வவுனியாவில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை காரணமாக குளத்து நீர்மட்டம் சடுதியாக குறைவடைந்து வருகின்றது. இந்நிலையில் மாகாறம்பைக்குளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள இறம்பைவெட்டி குளத்தின் நீரும் வற்றிய நிலையில் அக்குளத்தை நம்பிவாழும் இருபது மீனவ குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மீன்கள் இறந்து புழுப் பிடித்து காணப்படுவதுடன், இளையான்களும் மொய்ப்பதனால் துர்நாற்றம் வீசுகின்றது. இவ்வாறான சூழ்நிலையிலும் குளத்தில் எஞ்சி இருக்கும் மீன்களை பிடித்து வியாபாரநடவடிக்கையிலும் ஈடுபடுகின்றனர்.

இதனால் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படக் கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளது. வீசும் அதிக காற்றினால் துர்நாற்றம் காவிச் செல்லப்படுவதனால் சுவாச நோய்கள் ஏற்படும் அபாயநிலையும் ஏற்பட்டுள்ளது. அத்துடன், அவ்வழியினூடாக செல்லும்பொது மக்கள், பாடசாலை மாணவர்கள், முதியவர்கள் எனப்பலரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இறம்பைவெட்டி குளத்தின் கீழ் விதைக்கப்பட்டுள்ள சிறுபோக விவசாய நிலங்களுக்கு அதிகளவிலான நீரை பயன்படுத்தியமையாலும் வறட்சியினாலும் குறித்த குளத்தது நீர் வற்றியுள்ளது. இதனால் குளத்தின் கீழான சிறுபோக நெற் செய்கையும் பாதிப்படைத்துள்ளது.

குறித்த குளத்தின் நீர்மட்டத்தை கவனத்தில் கொள்ளாது சிறுபோக நெற்செய்கைக்கு நீர் இறைக்கப்பட்டமையும், சம்மந்தப்பட்டவர்களின் பொறுப்பற்ற செயற்பாடும் இத்தகைய பாதிப்பிற்கு முக்கிய காரணம் எனவும் கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

உரிய அதிகாரிகள் இது தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் இறந்த மீன்களை அகற்றி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அக்கிராம மக்கள் கோரியுள்ளனர்.





